அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்

 அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : சுவேதாரண்யேஸ்வரர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : பிரமவித்யாம்பிகை
  தல விருட்சம் : வடவால், கொன்றை, வில்வம்
  தீர்த்தம் : முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : ஆதிசிதம்பரம், திருவெண்காடு
  ஊர் : திருவெண்காடு
  மாவட்டம் : நாகப்பட்டினம்
  மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
  அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்
தேவாரப்பதிகம்

வாரப்பதிகம் கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.

-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.
திருவிழா:
  மாசி மாதம் - இந்திரப் பெருவிழா - 13 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா. காவிரிப்பூம்பட்டினத்தில்இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் இத்திருவிழா மிகவும் சிறப்புற நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிசேகமும், வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தலும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிசேகமும், ஆடியில் பட்டினத்தாருக்குச் சிவதீட்சை அளித்தலும், அம்பாளுக்கு ஆடிபூரம் பத்து நாள் உற்சமும், ஆவணியில் நடராஜருக்கு அபிசேகமும், கோகுலாஷ்டமி , விநாயகர் சதுர்த்தி விழாவும், புரட்டாசியில் தேவேந்திர பூஜையும், நவராத்தி விழாவும், ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும், கார்த்திகையில் மூன்றாவது ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகாருத்ரா அபிசேகமும், கார்த்திகை தீப விழாவும், மார்கழி திருவாதிரையில் நடராஜர் தரிசனமும், தை மாதத்தில் சங்கராந்தி விழாவும் இத்தலத்தில் சிறப்புற நடைபெறுகின்றன. பங்குனி தோறும் அகோர மூர்த்திக்கு லட்சார்ச்சானை வைபவம் சிறக்க நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
தல சிறப்பு:
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 11 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும்.
திறக்கும் நேரம்:
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
  அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609 114, நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
  +91-4364-256 424
பொது தகவல்:
  ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சன்னதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது.

கரையில் சூரியதீர்த்தலிங்க சன்னதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சன்னதி தனிக் கோயிலாகவுள்ளது. இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை

  இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்:
  நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலம் ஆகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி,பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும்.திருமண தோசம், புத்திர தோசம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள். சுவாமிக்கு மா , மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
 தலபெருமை:
  காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.

இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.

சுவேதாரண்யர் (திருவெண்காடர்) :திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

நடராஜர் :  இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

அகோர மூர்த்தி : ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.

சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.

அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.

பிரம்ம வித்யாம்பாள் : இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.

நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

காளிதேவி : சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.

துர்க்கை தேவி : துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.

புதன் பகவான் : வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.

பிள்ளையிடுக்கி அம்மன்: திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.

புதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.

இத்தலத்தில் மூர்த்திகள்(திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது.

காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது.

சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது.

பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.

அகோர பூஜை: புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும். எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.

  தல வரலாறு:
 
பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான்.சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.  தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.


சிறப்பம்சம்:
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இருப்பிடம் :
நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 15 கி.மீ தூரத்தில் திருவெண்காடு கோயில் உள்ளது.


சிவராத்திரி விரதம் இருக்கும் முறை

சிவராத்திரி விரதம் இருக்கும் முறை:- 7.3.2016 திங்கட்கிழமை
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில் நிறைவேறப் பிரார்த்திக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, இறைச்சிந்தனையில் இருக்க வேண்டும். மாலையில் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வத்தால் பூஜை செய்ய வேண்டும். இரவு நான்கு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையே லிங்கோற்பவ நேரம் எனப்படுகிறது. ஆகவே நான்கு காலங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்திலாவது பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள், கோவிலில் நடைபெறும் நான்கு கால வழிபாடுகளிலும் பங்கு கொள்ளலாம்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ருத்ராபிஷேகம், என்பது சிவனாருக்கு செய்யப்படும் அபிஷேகம். மந்திரபூர்வமாகச் செய்யப்படும் இது மிகச் சிறப்பு வாய்ந்தது. ருத்ராபிஷேகத்தைப் பற்றிய விவரங்கள் அறிய இங்கு சொடுக்கவும். இதை இல்லத்தில் செய்ய இயலாவிட்டால், ஆலயங்களில் செய்யலாம். சிவராத்திரி அன்று ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு.

மறு நாள் காலை பாரணை செய்து விரத நிறைவு செய்ய வேண்டும். இல்லத்தில் பூஜை செய்திருந்தால், புனர் பூஜை செய்து, சிவனாரை உத்யாபனம் செய்ய வேண்டும்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்:
யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைபிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம், கடைபிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தைத் தரும்.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.

அர்ஜூனன் சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் அப்பி, தம் அசையாத பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே. சிவராத்திரி விரத மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றே.

அவனருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை அல்லால்
அவனருள் இன்றி வாழும் அமரரும் யாரு மில்லை
அவனருள் எய்தின் எய்தா அரும்பொருள் இல்லை ஆணை
அவனல திறைவன் இல்லை அவனைநீ யடைதி என்றான். (கந்த புராணம்)
சிவராத்திரி தினத்தன்று, எம்பெருமானைப் பூஜித்து, சிவனருளால்,

வெற்றி பெறுவோம்!!!!

சிவபெருமானுக்கு 16 முகங்கள் உள்ள திருக்கோவில்,

சிவபெருமானுக்கு 16
முகங்கள் உள்ள திருக்கோவில்,
பிரதோசத்தன்று தரிசனம்
செய்யப்பட வேண்டிய கோவில்!

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஆத்தூர் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில், இயற்கை எழில் கொஞ்சும் பொன்பரப்பி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். தமிழர்களின் கட்டடக் கலைக்கும், புராதனச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் இந்த சிவாலயம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மகத ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசனான வானகோவராயன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது.

புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநர்களை கொண்டும், நுணுக்கமான வேலைப்பாடுகளுடனும் இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில், இவ்வூரில் செல்வம் கொழித்து பொன்னும் பொருளும் அளவற்றுப் புழங்கியதால் இவ்வூருக்கு `பொன் பரப்பி’ என்று பெயர் சூட்டி அழைத்திருக்கிறார்கள்.

பக்திக்குச் சான்று

சிற்றரசனான வானகோவராயனை, சேர, சோழ, பாண்டியர் மூவரும் தங்களுக்குக் கப்பம் கட்ட நிர்பந்தித்து வந்தனர். ஆனால் வானகோவராயன் அதற்கு உடன்படவில்லை. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத வானகோவராயனின் மீது ஆத்திரமடைந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களின் படையோடு மகதம் நோக்கி வந்தனர். இதை அறிந்த வானகோவராயன், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சொர்ண புரீஸ்வரரை வணங்கிவிட்டு வீரத்துடன் போருக்குக் கிளம்பினான்.

ஈசனின் பூரண அருளைப் பெற்று
போர் முரசு கொட்டி வந்த வானகோவ ராயனைப் பார்த்த மாத்திரத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களது அரச முடிகளை கழற்றி வைத்துவிட்டு போர் நடவடிக்கையை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர். இதனாலேயே அந்த இடம் மும்முடி என்றழைக்கப்பட்ட தோடு, சொர்ண புரீஸ்வரரின் அருளுக்கும் வானகோவராயனின் பக்திக்கும் சான்றாகவும் இருந்து வருவதாக வரலாறு கூறுகிறது.

கல்வெட்டுச் சிறப்பு

இக்கோயிலைப் பற்றிய வரலாற்றை,
ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் திருக்கோயில் சுற்றுச்
சுவர்களில் உள்ள கல்வெட்டுக்களில் காணலாம்.

காசி போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்குவதன் மூலம் பெறும் பலன்களை, இக்கோயிலுக்குச் செய்யும் ஏதேனும் சிறிய அளவிலான திருப் பணியின் மூலமும், ஈசனின் தரிசனத்தின் மூலமும் பெறலாம் என்பது போன்ற தகவல்களும், சிவதரிசன வழிமுறைகளும், வழிபாட்டு பலாபலன்களும் தெளிவாக இக்கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

ஷோடசலிங்கத்தின் சிறப்பு

இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார்.நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டு மின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக் கபட்டுள்ளதால், உலகையேகட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

நிறம் மாறும் அபிஷேகப் பால்

பெரும்பாலான சிவாலயங்களில்
உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், அவரின் திருமுகம் ஏதேனும் ஒரு பக்கத்தில் சாய்ந்திருப்பது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ண புரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பிரதான நிலைப்படியில் இருந்து சிவ தரிசனம் செய்வதற்கு வசதியான அமைப்பில் இருப்பது சிறப்பாகும். இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால் உள்ளிட்டஅபிஷேக பொருட்கள் நீல நிறமாக மாறி வழிந்தோடுவது குறிப்பிடத்தக்கது.

சிற்பங்களின் எளிமை

இக்கோயில்களில் உள்ள சிற்பங்களின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், தெய்வ உருவங்கள் ஒவ்வொன்றும் வெறும் ருத்ராட்ச மாலையுடன் காட்சி அளிப்பதே. ஏனெனில், காகபுஜண்ட ருக்கு சிவபெருமான் எளிமையாக தரிசனம் தந்ததை உணர்த்துவதற்காக மற்ற தெய்வங்களும், ஆடம்பரங்கள் எதுவுமின்றி மிக எளிமையாக காட்சியளிப்பதாக ஐதீகம்.

அதுபோலவே, வெளிப்பிராகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் ஆசனம் இட்டு அமர்ந்திருக்கும் முருகப்பெருமான், சுமார் 8 அடி உயரத்துடன் மிக பிரமாண்டமாக காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சம். இது தவிர சண்டிகேஸ்வரர், கன்னிமூல விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகிய தெய்வ மூர்த்திகளும் சிற்ப அழகுடன் காட்சி தருகிறார்கள்.

தேன் அபிஷேக மகிமை

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலங்கள் மற்றும் திங்கட்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து தேனபிஷேகம் செய்து வழிபட உகந்த நாட்களாகும்.

நீண்ட காலமாக திருமணமாகாதவர் கள், இந்தக் கோயிலுக்கு வந்து ஈசனுக்கு தேனபி ஷேகம் செய்து வழிபடுவதுடன், தொடர்ந்து 16 பிரதோஷ தினங்களில் வந்திருந்து ஈசனைத் தரிசித்து வேண்டிக் கொண்டால் திருமணத் தடை நீங்கும். மேலும் ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திர தோஷம் முதலான தோஷங்கள் கொண்டவர்களும், பிள்ளை பாக்கியம் இல் லாதவர்களும், தீராத மனக்கவலை கொண்ட வர்களும் சொர்ணபுரீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்து, பிரதோஷ காலங்களில் தொடர்ந்து வழிபட்டால் பிரச்னைகள் யாவும் அடியோடு நீங்கும் என்பது நம்பிக்கை.

தோஷம் உள்ளவர்கள், ஸ்வாமிக்கு தேன் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தரப்பட்ட தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.

இந்தத் தலத்தில் சிவபெருமான் முனிவருக்கு காட்சியளித்தது பிரதோஷ வேளை என்பதால், இந்த ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு விமரிசை

யாக நடைபெறுகிறது. பிரதோஷ நாட்கள் மட்டுமின்றி பௌர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் திங்கட் கிழமைகளில் வரும் சோமவார பூஜை, தமிழ் வருடப்பிறப்பு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை, கார்த்திகை தீபம் போன்றவையும் இங்கு வெகு விசேஷமாக நடைபெறுகின்றன.

காகபுஜண்டர் வழிபாடு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்ட சித்தர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார்.அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம். அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோயில் ஈசானத்தில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதியை 16 முறை வலம் வந்து, 2 முதல் 16 தேங்காய் வரை உடைத்து வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவ தோஷங்கள், தீராத மனக் கவலைகள் நீங்கி சிவ புண்ணியம் பெறலாம் என்பது நம்பிக்கை.

அவர் அருளிய நாடிச் சுவடியில் இக்கோயிலின் கருவறை மிக உக்கிரமானதாக இருக்கும் என்றும், அதனால் கருவறையில் ஏற்றப்படும் தீபம், எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இறைவனின் கருவறையில் அமைந்துள்ள தீபம் துடிப்போடுதான் எரிந்து கொண்டிருக்கிறது.

திருச்சிற்றம்பலம்.
சிவாய நம.

புன்னகை பூத்த தட்சிணாமூர்த்தி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய திருபுவனேஸ்வரர் திருக்கோயில் இது தெய்வீகத்துடன் தமிழர்தம் தீரத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டிடும் வகையில் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. தந்தைக்கு உபதேசித்த தகப்பன் சுவாமி அமைந்திருக்கும் சுவாமிமலையில் இருந்து மேற்கில் ஏழு கிலோ மீட்டரில் இத்தலம் அமைந்திருக்கிறது. இத்தலத்தின் அருகாமையில் புள்ளபூதங்குடி, திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களும் அமைந்திருக்கின்றன.

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் மூன்றாம் ராஜராஜசோழனின் காலத்தைச் சேர்ந்த ஆலயம் இது. இங்குள்ள கல்வெட்டுக்களில் இந்த ஆலயத்திலுள்ள சிவனுக்கு திருபுவன வீரேஸ்வரமுடையார் என்று பெயர் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இது பன்னிரு ஆழ்வார்களில் மிக முக்கியமானவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த திருத்தலமுமாகும்.
இங்கு ஞானப்பள்ளி தட்சிணாமூர்த்தியும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருக்கின்றனர். தெற்கு கோஷ்டத்தில் அமைந்திருக்கும் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி புன்னகை பூத்த முகத்துடன், இடதுபாதம் மலர்த்தி மேல் நோக்கிய நிலையில் வீற்றிருக்கிறார். இது வேறெங்கும் காணப்படாத சிறப்பாகும். இவரை வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

ஜப மாலையுடன் பிரம்ம சண்டேஸ்வரர்
சரியாகப் பேச முடியாதவர்கள் இவரை வழிபட்டால் சரளமான பேச்சுக்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள் என்று இத்தலம் குறித்து நம்பிக்கை நிலவுகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள சண்டிகேசுவரர் நான்கு திருக்கரங்களூடன் கையில் செப மாலை கொண்டு பிரம்ம சண்டேஸ்வரராக அமைந்துள்ளார்.
இக்கோயிலிலில் அமைக்கப்பட்டுள்ள கோமுகம் வேறெந்த ஆலயத்திலும் இல்லாத காட்சிகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. வனப்பகுதியில் நடக்கும் வீரமிக்க நிகழ்ச்சிகளை விவரிக்கும்வண்ணம் சிற்பங்கள் அமைந்துள்ளன. யாழி ஒன்று யானையை துரத்திச் செல்கிறது. அந்த யானையோ ஒரு குதிரையை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அக்குதிரைமீது வீரன் ஒருவன் அமர்ந்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளை வேட்டையாட வந்த ஒருவர் மரத்தின் மேல் அமர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இவற்றிற்கிடையே தீரமிக்க ஒரு பெண், காட்டுப் பன்றி ஒன்றை நீண்ட வாளால் கழுத்துப் பகுதியில் குத்தி வீழ்த்தும் காட்சி மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. நளின உடல்கொண்ட பெண்களின் நாட்டிய அடவுகளை வெளிப்படுத்தும் சிற்பங்களும் இக்கோமுகத்தில் உள்ளன.
சுவாமிமலை, திருமணஞ்சேரி, கஞ்சனூர், சூரியனார்கோயில், திருநாகேஸ்வரம் என்று கும்பகோணம் சுற்றுவட்ட திருக்கோயில்களுக்கு செல்வோர் திருமண்டங்குடி கோயிலுக்கும் சென்று வரலாம்.

நலம் தரும் கணபதி

நலம் தரும் கணபதி

தாமிரபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியிருக்கிறது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். இத்திருக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்புராதனத் திருக்கோயிலில், விநாயகர் தன்னுடைய முப்பத்திரண்டு திருத்தோற்றங்களில் எட்டாவது வடிவமாக போற்றப்படுகின்ற உச்சிஷ்ட கணபதியாக அவதரித்து அருள்பாலித்துவருகிறார்.

ஜீவநதியான ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் எட்டு நிலை மண்டபங்கள், மூன்று பிராகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மூலவராக விநாயகர் எழுந்தருளியுள்ள தனித்திருக்கோயில் இது.

ஹேரண்ட மகரிஷி

கலியுகத்தில் விநாயகரைப் பற்றிப் போதிக்க முக்தல மகரிஷியைத் தென்நாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமையும் இத்திருத்தல மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கு உண்டு. இங்கு அவர், கருவறையில் அம்பாளை மடியில் தாங்கிக் காட்சி தருகிறார். மும்மூர்த்திகளை விட முதன்மை யான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் வீற்றிருக்கும் ‘நீலவாணி' அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல்

திருமணத் தடை நீங்குவதற்கும், தம்பதியரிடையே மன ஒற்றுமை ஏற்படுவதற்கும் பக்தர்கள் இவரை நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். செல்வம் பெருகுவதற்குக் கொழுக்கட்டையையும், குழந்தை வரத்திற்குச் சர்க்கரைப் பொங்கலையும், நோய்கள் தீர்வதற்குக் கரும்புச் சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

முற்காலத்தில் பாண்டிய மன்னர்கள் முதல் நாயக்க மன்னர்கள் வரையிலும், அதன் பின்பு நகரத்தார்களும் வணங்கி அருள் பெற்ற இத்திருத்தலத்திற்கு அருகில் பைரவ தீர்த்தக் குளம் உள்ளது. இதில் புனித நீராடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. வருடந்தோறும் சித்திரை மாதத்தின் முதல் தினத்தன்று சூரிய ஒளி உச்சிஷ்ட கணபதியின் மீது பரவும் அதிசய நிகழ்வும் இங்கு நடைபெறுகிறது. அந்நாளில் சூரிய பகவான் விநாயகரை வணங்குவதாகச் சொல்லப்படுகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம், வரலாறு ஆகியவற்றால் சிறந்து விளங்கும் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கண்பதி திருத்தலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அன்றைய தினம் உச்சிஷ்ட கணபதிக்கு விசேஷ அபிஷேகங்களும், சிறப்பு தீபராதனைகளும் நடைபெறுகின்றன. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

உச்சிஷ்ட கணபதியை வணங்க உள்ளம் மகிழும்.

திருவாரூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கமலாம்பாள் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!

திருவாரூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கமலாம்பாள் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!

பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர்.
திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.

தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை. இதற்கு சான்று ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.
நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.
எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் .

சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம்.
நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.
நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .
பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.

திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.
இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.
24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.

சுருளிமலை சுருளி வேலப்பர் திருக்கோவில்

சுருளிமலை சுருளி வேலப்பர் திருக்கோவில்
சுருளி அருவி கோவில் 

தேனி மாவட்டம், கம்பம் சுருளி மலையில் ஒரு குகையின் மீது அமைந்துள்ள முருகபெருமான் திருக்கோவில்.இதன் அருகில் சுரபி நதி ஓடுகின்றது. இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது. மேலும் இந்த நீர் பட்ட இலை, தழைகள் தொடர்ந்து 40 நாட்கள் நீரில் நனைந்த பின்னர்,பாறையாக மாறுகிறது.
எவ்வளவு நாட்களும் நீர் இங்குள்ள பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது, வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது அதிசயம் ஆகும். இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால், சுருதி தீர்த்தம் அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, சுருளி தீர்த்தம் ஆனது. இங்குள்ள முருகபெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.
மஹாவிஷ்ணுவின் மகளான வள்ளியை மலைஅரசனான நம்பிராஜன் வளர்த்து, முருகபெருமானுக்கு மணம் முடித்து வைத்தார். திருமணத்திற்கு பின்னர், முருகனுக்கு தனக்கு சொந்தமான இந்த மலைப்பகுதியை திருமண சீராக அளித்தார். எனவே இந்த தலத்திற்கு வந்து அருளினார்.
ஒருசமயம், சனி பகவான், தனது நியமனப்படி,தேவர்களை ஆட்கொள்ளவேண்டி வந்தது. தேவர்கள் அனைவரும் முருகனை சரணடைந்து, வழிபட, சனியின் பிடி அகன்றது.
சிவபெருமானிடம் இலங்கையை ஆண்ட ராவணேஸ்வரன் தனது தவ வலிமையினால் அண்ட சராசரங்களையும் ஆளும் வரம் பெற்றான். அதன் பின்னர் தேவர்களையும் ரிஷிகளையும் சித்தர்களையும் வதைத்தான். அனைவரும் இங்குள்ள கைலாசநாதர் குகையில் அருள்புரியும் மஹாவிஷ்ணுவிடம் சரணடைந்து காத்து அருள வேண்டினர். இதற்குள் ராவணன் தனது படையுடன் இங்கு வந்து கூச்சலிட மஹாவிஷ்ணு பஞ்ச பூதமாய் உருவெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் பெரிய உருவெடுத்து கோப நிலை காட்ட, இதைக்கண்டு நடுங்கி தன் படைகளுடன் திரும்பி ஓடினான். இத்தகைய பெருமை வாய்ந்த கைலாசநாதர் குகையின் மேற்பகுதியில் சுருளிவேலப்பன் அருள் பாலிக்கிறார்.
முருகன், சுருளிவேலப்பன் சன்னதியில், சிவன், விஷ்ணு, விநாயகர் அனைவரும் காட்சி தருவது சிறப்பான அம்சமாகும். இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசித்து வருவதாக ஐதீகம். ஆதலால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி சிலைகள் உள்ளன. ஆடி அமாவாசை, தை , புரட்டாசி, மஹாளய அமாவாசை தினங்களில், இங்கு நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விசேஷ பூஜைகள் செய்கின்றனர்.
குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு சுருளி வேலப்பரே மகனாக வந்து இறுதிச்சடங்குகள் செய்து முடித்தாராம். எனவே ஆண் வாரிசுகள் இல்லதவர்களும் இறுதி வேளையின் போது இவரை தங்கள் மகனாக பாவித்து வழிபட மன அமைதியும் வளமும் கிடைக்கும்.
இங்கு பெருமாள் சன்னதியில் சிவபெருமானும் இருப்பது ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. விபூதி, குங்கும பிரசாதமும் தருகின்றனர். அத்துடன் சடாரி ஆசீர்வாதமும் செய்கின்றனர். துளசி தீர்த்தமும் வழங்கப்படுகிறது. இது உச்சிக்கால பூஜையில் மட்டும் கொடுக்கப்படுகிறது.
இங்கு பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும் சிவபெருமானுக்கு பரிவார மூர்த்தியாக தெட்ஷிணாமூர்த்தியும் (சின்முத்திரையுடன்) இருக்கின்றனர். சிவபெருமா னாருக்கு விசேஷ அபிஷேகங்கள் உண்டு. பால்குடம் எடுத்து முடி காணிக்கை செலுத்தி, தீர்த்த நீராடி, வழிபட, சகல பாவங்களும் நீங்கும். நல் வாழ்வு கிட்டும். தீராத வியாதி தீரும் என்பதும் நம்பிக்கை ஆகும். இங்கு அன்னதானம் செய்தால், நற்கதியும் மோட்ஷமும் கிட்டும் என்பதால், அன்னதானம் பிரதானமாய் நடைபெறுகிறது.
சிவபெருமானின் திருமணத்தின்போது அனைவரும் இமயமலைக்கு சென்றுவிட்டதால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்ததை சமன் செய்ய அகத்திய முனிவரை தென்பொதிகைக்கு அனுப்பினார். பின்னர் அகத்திய முனிவருக்கு தன் திருமணக்கோலத்தைக்காட்ட, இங்குள்ள குகையில் அருளினார். எனவேதான் இந்த குகை கைலாய குகை என்று அழைக்கப்பட்டது. இந்த தலத்தில் தனித்தனிக் குகைகள், தீர்த்த குளங்களுடன் உள்ளன. விபூதிக்குகை, கன்னிமார் குகை, சர்ப்பக்குகை, கிருஷ்ணன் குகை, பாட்டையர் குகை என பல குகைகள் உள்ளன.
இந்த மலை மீது கன்னிமார்கள் நடனமாடிய தடயங்கள் உள்ளன என்றும்
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறி, மலைக்கோவில்களை “குன்று தோறாடல்” என்று பெயரிடுகிறார். சுருளி வேலப்பர் சுயம்புவாக தோன்றி, குடவரை சன்னதியில் அருள் பாலிக்கிறார்.அவர் அருகில் விநாயகர்,மகாலிங்கம், சந்தான கிருஷ்ணன், வீரபாகு, ராம பிரான், லட்சுமணன் ஆகியோர் உள்ளனர். இம்மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக கூறுகின்றனர்.
குகைகள் மிகவும் சிறிய அளவில் உள்ளன. இதனுள் இருவர் மட்டுமே அமர இடம் இருக்கின்றது. அதனுள் செல்வது யோகாசன பயிற்சி செய்வது போல் இருக்கும். தீர்த்தமும் பாறையின் மீது இருக்கும் துகள்களையே விபூதி பிரசாதமாக தருகின்றனர்.
முக்கிய விழாக்களாக ஆடி பதினெட்டாம்பெருக்கு, தைப்பூசம், ஆடி , தை அமாவாசை, பங்குனி உத்திரம், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, சித்திரை திருவிழா, கந்த சஷ்டி ஆகியவை கொண்டாடப்படுகிறது.
நமது இந்து சமயத்தில் கோவிலுக்கு செல்வது என்பது கலாசாரத்தை வளர்ப்பதற்கும், ஒருவருக்கொருவர் அன்புடனும் கனிவுடனும் உறவை வளர்த்துக்கொள்வதற்குமே ஏற்பட்ட சம்பிரதாயமாகும். இதனால் ஒழுக்கம் மேம்படுகிறது. நாம் குளித்து உடலை சுத்தம் செய்தபின்பே கோவிலுக்குள் செல்கிறோம். மற்ற சமயங்களில் கோவிலுக்குள் செல்லும்பொழுது, கை கால் அலம்பிய பின்பே செல்கிறோம். ஏதாவது சுலோகத்தை உச்சரித்தபடியே செல்வதால், மற்ற சிந்தனைகள் வருவதில்லை. மனம் ஒருமைப்படுகிறது. கோவிலை வலம் வருவதால் நமக்கு நடைப்பயிற்சி கிடைக்கிறது. எனவே கோவில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நல்ல நிறைவையும் தருகிறது.
இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பம் ,கம்பராய பெருமாள் கோவில் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது.
இந்த கோவிலுக்கு செல்ல மதுரை வந்து தேனிக்கு பஸ் மூலம் வந்த பின்பு கம்பம் அல்லது உத்தமபாளையம் செல்லவேண்டும்.இந்த இரண்டு ஊர்களில் இருந்தும் சுருளிதீர்த்தம் செல்லும் பஸ் மூலம் சுருளிப்பட்டி வந்து இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தால்தான் இந்த தலத்தை அடைய முடியும். நல்ல பாதை உண்டு என்றாலும் இரண்டு புறமும் காட்டில் உள்ள செடிகளும் புதருமாகத்தான் இருக்கும். ஆனால் நல்ல சுகமான தென்றலையும் மூலிகை மணத்தையும் அனுபவிக்கலாம். மழைக்காலத்திலும் மற்றும் பருவ காலத்திலும் சுருளி அருவியில் சுகமாய் நீராடலாம். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.
சைவம் வைணவம் சமரசமாகத் தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்த நல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் சுருளி வேலா போற்றி!
அருள்மிகு சுருளி வேலப்பர் திருக்கோவில், சுருளிமலை,கம்பம் – 625 516. தேனி மாவட்டம்